தங்களின் வருகைக்கு நன்றி

தங்களின் வருகைக்கு நன்றி
output:

Sunday, June 19, 2011

பணம் மரத்தில்தான் காய்க்கிறது!





“பணம் என்ன மரத்திலா காய்க்குது?” – இந்த கேள்வி உங்கள் காதில் விழாத நாளே இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை. யாராவது இனி இப்படி உங்களை கேட்டால், தயங்காமல் பதில் சொல்லுங்கள். “பணம் மரத்தில்தான் காய்க்கிறது!”

என்னென்னவோ தொழில் நடத்தி நஷ்டமடைந்தவர்கள் ஆயிரம் பேரை உங்களுக்கு தெரியலாம். நிச்சய லாபம் கொடுக்கக்கூடிய ஒரு தொழில் இருக்கிறது. கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

மரம் வளர்ப்பு!

மரம் வளர்ப்பு ஒரு தொழிலா? மரம் வளர்த்தால் மாங்காய் கிடைக்கும், தேங்காய் கிடைக்கும். காசு கிடைக்குமா? கிடைக்காது. கொட்டும். இடியுடன் கூடிய மழை மாதிரி உங்கள் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டோ கொட்டுவென நிச்சயம் கொட்டும்.

முதலில் இரண்டு கதைகளை பார்த்துவிடுவோம்.

முதலில் அசலூர் கதை.

பீகாரின் பகல்பூர் மாவட்டத்தில் இருக்கும் கிராமம் தர்காரா. பிறக்கும் குழந்தை பெண்ணாக இருந்தால், குறைந்தது பத்து மாமரங்களை நடுவது இங்கே வழக்கம். இவ்வழக்கம் எப்போதிலிருந்து பின்பற்றப்படுகிறது என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால் பரம்பரை பரம்பரையாக ஒரு சடங்காகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சரி, இந்த சடங்கினால் வேறு என்ன பிரயோசனம்? சுற்றுச்சூழல் காக்கப்படுகிறது என்கிற உலகளாவிய பயன்பாட்டை எல்லாம் விட்டு விடுவோம்.

இக்கிராமத்தில் வசிக்கும் சுபாஷ்சிங் ஒரு சிறுவிவசாயி. இருபது ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு மகள் பிறந்தாள். நிகாகுமாரி என்று பெயர் வைத்து, ஊர் வழக்கப்படி பத்து மாங்கன்றுகளை நட்டு வளர்த்தார்.

இந்த இருபது ஆண்டுகளில் மகள் திருமணத்துக்கு செலவு செய்யவேண்டுமே என்றெல்லாம் சுபாஷ்சிங் என்றுமே கவலைப்பட்டதில்லை. சமீபத்தில் நிகாகுமாரிக்கு ஜாம் ஜாமென்று திருமணம் நடந்தது. மாப்பிள்ளை அரசுப்பள்ளியில் வாத்தியார்.

“என் மகள் வளரும்போது அவளோடு சேர்ந்து, அவளுக்காக நான் நட்ட மாமரங்களும் வளர்ந்தது. மூன்றே ஆண்டுகளில் காய்க்க ஆரம்பித்தது. பழங்களை சந்தையில் விற்கத் தொடங்கினேன். இத்தனை ஆண்டுகளாக இதில் கிடைத்த வருமானம், எனது மகளின் திருமணச் செலவினை விட பன்மடங்கு அதிகம்” என்று பி.பி.சி. தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் சொன்னார் சுபாஷ்சிங்.

‘லாஜிக்’ ஆக யோசித்துப் பாருங்கள். எவ்வளவு பெரிய பொருளாதார ரகசியம், இந்த மரம் நடும் சடங்கில் அடங்கியிருக்கிறது. கிராமப் பொருளாதாரத்தையே மாற்றியமைக்கும் மரம் நடும் சடங்கு, நிச்சயமாக வெறும் மூடநம்பிக்கையல்ல. பெரும் பொருளாதார நிபுணர்களுக்கு கூட தோன்றாத ‘ஐடியா’வினை, இக்கிராமத்து மக்கள் காலம் காலமாக பின்பற்றி வருகிறார்கள்.

மாமரங்களால் இவ்வளவு பெரிய பொருளாதார அனுகூலங்களை அடையமுடியுமா என்று உங்களுக்கு சந்தேகம் தோன்றலாம். ஒரு நடுத்தர அளவிலான மாந்தோப்பு, ஒவ்வொரு வருடமும் ரூபாய் ரெண்டு லட்சம் வரை வருமானத்தை வழங்குகிறது. மாந்தோப்பில் கிடைக்கும் வருமானத்தை, அப்படியே சம்பந்தப்பட்ட பெண் குழந்தையின் பெயரில் வங்கியில் சேமிக்கிறார்கள்.

மாமரங்கள் தரும் வருமானத்தால் முன்பெல்லாம் கோதுமை, நெல் விதைத்து வந்த விவசாயிகளும் கூட இப்போது தோப்புகள் அமைப்பதில் ஆர்வம் காட்டுகிறார்களாம். ஊரிலேயே வயதானவர் சத்ருகன் பிரசாத் சிங். 86 வயதாகும் இவர், அந்தக் காலத்தில் கடுமையான விவசாயி. 25 ஏக்கர் நிலம் வைத்திருக்கிறார். தன் நிலம் முழுக்க மாமரம் மற்றும் லிச்சி மரங்களை நட்டு இன்று நிம்மதியாக இருக்கிறார்.

தர்காரா இப்போது பசுமைச்சேலை உடுத்தி, மாஞ்சோலையாக பூத்துக் குலுங்குகிறது. நம்புங்கள். தர்காரா கிராமத்தில் மாமரம் மற்றும் லிச்சி மரங்களின் எண்ணிக்கை மட்டுமே ஒரு லட்சம். இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட மாமரங்கள் நன்கு வளர்ந்து வருடா வருடம் நல்ல மகசூலை தந்து வருகிறது.

அடுத்தது நம்மூர் கதை.

புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்கலத்துக்கு அருகில் சேந்தன்குடி என்றொரு கிராமம். இந்த ஊரில் தங்கசாமி என்றொரு விவசாயி. முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பாக விவசாயத்தால் நஷ்டப்பட்டுப்போய் மனம் கலங்கி நின்றார். ஊரில் கடுமையான வறட்சி. சொத்தை விற்று, கடன்களை அடைத்து ஏதாவது ஓட்டலில் ‘சர்வர்’ வேலைக்கு சென்றுவிடலாமா என்று யோசித்தார்.

அன்று, அகில இந்திய வானொலியில் ஏதோ நிகழ்ச்சி கேட்டுக் கொண்டிருந்தார். ‘மரப்பயிரும் பணப்பயிரே!’ என்கிற தலைப்பில் பேராசிரியர் ஒருவரின் உரை. அதுதான் தங்கசாமி வாழ்வின் திருப்புமுனை. சொத்தை விற்கும் முடிவினை மூட்டை கட்டி வைத்தார்.

நூறு தேக்கு மரங்களை வாங்கி தனது நிலத்தில் நட்டார். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, அவை வளர்ந்து தன்னையும் தனது குடும்பத்தையும் பாதுகாக்கும் என்பது அவரது திட்டம். ஒரே ஆண்டிலேயே தங்கசாமி நட்ட மரங்கள் இருபது அடி வளர்ந்து அவரை உற்சாகப்படுத்தியது. இதே உற்சாகத்திலேயே நூறு மாங்கன்றுகளை நட்டார். அப்படியே நூறு முந்திரி, நூறு புளியங்கன்று என்று நட்டுக்கொண்டே சென்றார்.

வேம்பு, சந்தனம், ரோஸ்வுட், செஞ்சந்தனம், நெல்லி, புளி, மகோகனி என்று சுமார் நூறு வகையில் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட மரங்களுட, இருபத்தைந்து ஏக்கர் அளவுக்கு விரிந்த காட்டுக்கு சொந்தக்காரர் ஆகிவிட்டார் தங்கசாமி. இந்த காட்டினுடைய மதிப்பு பல கோடி. ஓட்டலில் சர்வர் வேலைக்குச் செல்ல திட்டமிட்டவர், இன்று கோட்டீஸ்வரர்.

சேந்தன்குடியில் போய் ‘மரம்’ தங்கசாமி என்று விசாரித்துப் பாருங்கள். இவரது காட்டுக்கு வழி சொல்லுவார்கள். தனது காட்டில் மட்டுமல்ல. நாடெங்கும் மரம் வளர்க்க ஊக்குவிப்பதுதான் தங்கசாமியின் லட்சியம். திருமணங்களுக்கு சென்றால் ‘மொய்’ எழுதமாட்டார். மரகன்றுதான் பரிசளிப்பார். புதுக்கோட்டை மாவட்டம் முழுக்க பயணித்து, எல்லாப் பள்ளிக்கூடங்களிலும் மரம் நட்டிருக்கிறார்.

இன்று உலகெங்கும் இருந்து, தங்கசாமி வளர்த்த காடை பார்க்க ஆராய்ச்சியாளர்கள் குவிகிறார்கள். பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் தங்கசாமியின் அனுபவங்கள் வேளாண் மாணவர்களுக்கு ஆராய்ச்சிப் பாடமாக போதிக்கப்படுகின்றன.

இரண்டு கதைகளையும் வாசித்து, ஆச்சரியமாக இருக்கிறதா? ஆச்சரியமோ, அதிர்ச்சியோ அடையத் தேவையில்லை. தங்கம், வெள்ளி, பிளாட்டினம், மார்பிள், கிரானைட் போன்ற உலோகங்கள், கனிமங்கள் மாதிரி மரங்களும் கூட ‘காஸ்ட்லி’ ஆனவைதான்.

உதாரணத்துக்கு செஞ்சந்தன மரம். அணு உலை கதிர்வீச்சினை தடுக்கும் சக்தி இம்மரவகைகளுக்கு உண்டு. ஒரு டன் மூன்றரை முதல் நாலு லட்ச ரூபாய் வரைக்கும் சந்தை மதிப்பில் போகும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். எத்தகைய வறட்சியையும் தாங்கி வளரக்கூடிய தன்மை கொண்டது இம்மரம்.

குறைவான ஆள் தேவை, உற்பத்தி மற்றும் பராமரிப்புச் செலவும் மிகக்குறைவு என்பதால் ‘மரம் வளர்ப்பு’ நல்ல லாபகரமான தொழிலாக விளங்குகிறது. முழுநேரமும் இத்தொழிலில் ஈடுபட்டிருக்க வேண்டிய தேவையுமில்லை. நிறைய பேர் ‘பார்ட் டைம்’ மற்றும் ‘வீக் எண்ட்’ தொழிலாகவும் கூட இத்தொழிலை செய்து வருகிறார்கள்.

குமிழ், முள்ளில்லா மூங்கில், மலைவேம்பு, சந்தனம் ஆகிய மரங்கள், இத்தொழிலுக்கு நன்கு தோதுப்படும் மரங்கள். குறிப்பாக குமிழ்மரம். தேக்கு வகையைச் சார்ந்த இம்மரம் வெகுவேகமாக வளரும். ஒரே ஒரு மரம், எட்டு ஆண்டுகளில் ஒரு டன் அளவுக்கு வளர்ந்து நிற்கும். இன்றைய தேதியில் விலை எட்டாயிரம் முதல் பத்தாயிரம் வரை கிடைக்கும். ஒரு ஏக்கருக்கு சுமார் ஆயிரத்து இருநூறு மரங்களை வளர்க்க முடியுமென்றால், லாபத்தை நீங்களே கால்குலேட்டர் கொண்டு கணக்கிட்டுக் கொள்ளுங்கள். 

“மரக்கன்றுகளின் விலை இருபதிலிருந்து நூறு ரூபாய்தான். நம் கண்ணெதிரிலேயே அவை வளர்ந்து, பலன் தர ஆரம்பிக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு விலையே இல்லை” என்கிறார் மர ஆர்வலரான நடேசன்.

அந்தகாலத்து அண்ணா பல்கலைக்கழக பொறியாளரான நடேசனுக்கு இப்போது வயது எழுபது. சொந்தமாக ஒரு தொழிற்சாலை அம்பத்தூரில் வைத்திருந்தார். தொழில் நிமித்தம் 1980ஆம் ஆண்டு ஜப்பானுக்கு சென்றிருந்தபோது ‘க்ரீன் எர்த்’ என்றொரு கண்காட்சியை கண்டுகளிக்கும் சந்தர்ப்பம் இவருக்கு வாய்த்தது. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது நிலப்பரப்பில் நாற்பது சதவிகித காடுகளை கொண்டிருந்ததாகவும், அதன்பிறகு முப்பதாண்டுகளிலேயே வெகுவேகமாக அந்நிலை மாறி பதினான்கு சதவிகித காடுகளையே கொண்டிருப்பதாகவும் ஒரு செய்தியை அங்கே அறிந்தார். நாட்டின் பசுமையை மனிதர்கள் சுயநலத்துக்காக அழித்துக் கொண்டிருக்கிறோமே என்ற குற்றவுணர்ச்சி தோன்றியது. ஊர் திரும்பியதும் கும்மிடிப்பூண்டியில் 18 ஏக்கர், காரனோடையில் 6 ஏக்கர் நிலம் வாங்கி மரங்கள் வளர்க்க ஆரம்பித்தார்.

இன்று தனது ஓய்வுக்காலத்தை தான் வளர்த்த மரங்களோடு மகிழ்ச்சியாக கழித்துக் கொண்டிருக்கிறார். இத்தனை ஆண்டுகளில் இவர் வளர்த்த மரங்களின் எண்ணிக்கை மட்டுமே இருபதாயிரம். தொழிலதிபரான இவர் ‘மரம் வளர்ப்பும் நல்ல லாபகரமான தொழிலே’ என்று பொருளாதாரரீதியான பார்வையில் சுட்டிக் காட்டுகிறார்.

“மரம் வளர்ப்பினை சுற்றுச்சூழலைக் காக்கவோ, உலகவெப்பமயமாதலை குறைக்கவோ மட்டுமே செய்ய வேண்டும் என்பதில்லை. வங்கியில் வைப்புநிதி போட்டு வைப்பது மாதிரி கூட வளர்க்கலாம். கனியாகவோ, பூவாகவோ, விறகாகவோ, மருந்தாகவோ ஏதோ ஒரு வகையில் நீங்கள் வளர்த்த மரம் உங்களுக்கு நிறைய திருப்பித் தரும். தரிசு நிலம் கையகலம் கூட இல்லை என்கிற நிலை வரவேண்டும். சும்மா கிடக்கும் நிலங்களில் எல்லாம் சவுக்கு, மூங்கில் என்று கிடைத்த மரங்களை நட்டுவைத்தால், காலப்போக்கில் அவை நிறைய வருமானத்தை அள்ளித்தரும்” என்கிறார் நடேசன்.
மரம் வளர்ப்பு என்பது புதிய விஷயமில்லை. பாரம்பரியமாக நம் முன்னோர் செய்து வந்ததுதான். என்ன, இடையில் நகரமய சொகுசில் எல்லாவற்றையும் மறந்துவிட்டோம். மீண்டும் அதைத்தொடர வேண்டிய அவசியம் ஏற்பட்டு வருகிறது. ஆளுக்கு ஒரு மரமாவது நட்டு, நாமும்தான் இந்த மகிழ்ச்சியை அனுபவித்துப் பார்ப்போமே?


ஆனால் நாமூரில் நன்றாக விளைந்துகொண்டு இருக்கும் தோப்புகளை எல்லாம் அழித்துவிட்டு மனைகளாக உருமாற்றி வியாபாரம் செய்து கொண்டு இருக்கிறோம்.

நம் முன்னோர் நமக்காக சேமித்து வைத்த சொத்துகளை இப்படி அழித்து விட்டால், நம் சந்ததியினருக்கு என்ன செய்யப்போகிறோம் 






மரம் வளர்ப்பு : சில மகிழ்ச்சித் துளிகள்!

• மதுரை மாவட்டத்தில் இருக்கும் கிராமம் மாத்தூர். இந்த ஊர் கண்மாய் கரைகளில் பலன் தரும் புளிய மரங்களை பொதுமக்கள் நட்டு, பலன் பெற்று வருகிறார்கள். விறகுக்காக கண்மாய் மாதிரி பகுதிகளில் கருவேல மரங்களை வளர்ப்பது வழக்கம். இவை நிலத்தடி நீரை வெகுவாக உறிஞ்சிவிடுவதால் மாத்தூர் மக்கள் இவற்றை அழித்து, கரையோரங்களில் புளியமரங்களை நட்டு வருகிறார்கள். ஆண்டு தோறும் இம்மரங்களில் புளியம்பழம் பறிக்க ஏலம் விடப்படுகிறது. ஏலத்தொகையை அரசு கஜானாவுக்கு வருவாயாகவும் கொடுத்து அசத்தி வருகிறார்கள் மாத்தூர் மக்கள்.

• சோளங்குருணி என்கிற கிராமமும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தது. இந்த ஊரின் ஊடே செல்லும் நெடுஞ்சாலையின் இருபுறமும் பொதுமக்களால் புளிய மரங்கள் ஏராளமாக நட்டு வளர்க்கப்பட்டது. இம்மரங்கள் நெடுஞ்சாலைத் துறைக்கே சொந்தமென்றாலும், பொதுமக்கள் முன்வந்து வளர்த்தவை என்பதால், இதில் கிடைக்கும் வருமானத்தை கிராமவளர்ச்சித் திட்டங்களுக்கே நெடுஞ்சாலைத்துறை தந்துவிடுகிறது.

• திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் ஒரு சர்வதேச அமைப்பு - The International Small Group Tree Planting (TIST) – ஒரு லட்சம் மரங்களை நட திட்டமிட்டிருக்கிறது. இம்மரங்கள் முழுக்க அப்பகுதி சிறு விவசாயிகளின் நிலங்களில் நடப்படும். விவசாயிகளின் வழக்கமான பணிகளோடு, மரம் வளர்ப்பையும் சேர்த்து செய்வதின் மூலம் கூடுதல் வருவாயை அவர்கள் ஈட்ட முடியும் என்ற நோக்கத்தில் இந்த மரங்கள் நடப்படுகின்றன.





என்னென்ன மரங்களை வளர்க்கலாம்?

மணற்பாங்கான கரையோர நிலங்களில் வளர்க்கக் கூடியவை :பின்னை, முந்திரி, சிவகுண்டலம், பூவரசம், தென்னை, பனை, புங்கன், வேம்பு, நெட்டிலிங்கம், அழிஞ்சி, நாட்டு வாதுமை.
சிறுமரங்கள் : புங்கன், சரக்கொன்றை, கல்யாண முருங்கை, முருங்கை, பெருங்காலி, தங்கபட்டி, மயில் கொன்றை, கோவர்தனம், பவழமல்லி, மந்தாரை, தங்க அரளி, ரெட் கார்டியா, செண்பகம், கறிவேப்பிலை

மரச்சாலை மரங்கள் : வேம்பு, மகிழம், செவ்வில்வம், மலைவேம்பு, பிணாரி, இலவம்பஞ்சு, ஒதியமரம், வாகைமரம், கொண்டைவாகை, இயல்வாகை, வாதா நாராயண மரம், பூந்திக்கொட்டை மரம், மாவுக்காய், நுணா, பாலை, தேன்பூச்சி, மூக்குச்சளி, தூங்குமூஞ்சி
பழவகை மரங்கள் : நாவல், நெல்லிக்காய், பலாமரம், வில்வமரம், மாமரம், இலுப்பை, கொடுக்காப்புளி, கொய்யா, விளா, சபோட்டா, இலந்தை, சீதாப்பழம், மாதுளை, அரநெல்லி, கரம்போலா, பிம்ப்ளீ

பறவைகளை வசீகரிக்கும் மரங்கள் : கொய்யா, கறிவேப்பிலை, நெட்டிலிங்கம், கல்யாண முருங்கை, நெய்பழம், கம்பளி, இலுப்பை, ஸபோட்டா, அகத்தி, அத்தி, அழிஞ்சி

அழகிய பூக்கள் பூக்கும் மரங்கள் : பூந்திக்கொட்டை, பூமருது, அசோகா, மந்தாரை, திருவாட்சி, கொக்கு மந்தாரை, ஃப்ளேம் ஆஃப் தி ஃபாரெஸ்ட், மரவல்லி, சரக்கொன்றை, மஞ்சக் கொன்றை, கேஸியா ஜாவா, ஆத்துப் பூவரசு, நெருப்புக் கொன்றை

*அரசமரம், ஆலமரம் போன்றவை பரந்து வளரக்கூடிய பெரிய மரங்கள். அவை விசாலமான இடமாக இருந்தால் மட்டுமே வளர்க்கப்பட வேண்டும்.



எப்போது நடலாம்?

மரக்கன்றுகளை நட மழைக்காலமே சிறந்தது. பருவமழை துவங்கும் ஜூன் முதல் செப்டம்பர் வையிலான மழைக்காலம் இதற்கு ஏற்றது. தாழ்வான பகுதிகளில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் நீர் முற்றிலுமாக வடிந்துவிடுவதால், இம்மாதங்கள் ஏற்றவை. மரக்கன்றுகளை காலை 6 மணி முதல் 10 மணிக்குள் நடுவது நல்லது. இல்லையேல் மாலை 3 மணி முதல் 6 மணிக்குள் நடலாம்.


மரக்கன்றுகளை எங்கே வாங்கலாம்?

வனத்துறை அலுவலகங்கள் அருகில் இருந்தால், அவர்களிடம் விசாரித்து வாங்கலாம். வனத்துறை தோட்டங்களில் குறைந்த விலையில் தரமான மரக்கன்றுகள் கிடைக்கும். இல்லையேல் நர்சரிகளில் நீங்கள் விரும்பும் மரக்கன்றுகளை வாங்கி நடலாம். மரக்கன்றுகளை வாங்கும் இடத்திலேயே, அவற்றை பராமரிப்பது, உரமிடுவது குறித்த ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ளலாம்.



நகரங்களில் மரம் வளர்ப்பு!

“நாங்கள் மண் தரையே கண்ணில் படாத கான்க்ரீட் காடுகளில் வசிக்கிறோம். நாங்கள் என்ன மரத்தை வளர்ப்பது?” என்று நகரவாசிகள் கேட்கலாம். உங்கள் வீட்டுக்கு முன்பு கார், பைக் விட கொஞ்சமேனும் இடம் நிச்சயம் இருக்குமில்லையா? அது போதும். கொத்தனார் ஒருவரை கூப்பிட்டு 2க்கு 2 அளவில் குழிதோண்டி, முருங்கை வளர்க்க ஒரு கட்டமைப்பு ஏற்படுத்தித்தர சொல்லுங்கள். பெரிய பராமரிப்பு தேவையின்றி அதுபாட்டுக்கு வளரும் மரம் முருங்கை மரம். தெரிந்தவர்களிடம் ஒரு கிளை வாங்கி வந்து நட்டு வைத்தால், அது பாட்டுக்கு வளர்ந்து நிற்கும். இரண்டு வருடங்களில் ஐநூறு, அறுநூறு காய்கள் காய்த்துத் தொங்கும். முருங்கை கீரையும் போனஸ்.

(நன்றி : புதிய தலைமுறை)




Thursday, June 16, 2011

''ஐயோ, வலி உயிர் போகுதே...''



- கை, கால்களில் தைலம் தேய்த்தபடி, வலி தோய்ந்த வார்த்தைகளால் அலறும் பெண்களை விளம்பரங்களில் மட்டும் அல்ல... பல வீடுகளிலும் பார்க்கிறோம். சமையல் அறை தொடங்கி அலுவலகம் வரை பலவித பணிகளாலும் பம்பரமாகச் சுழலும் பெண்களைப் பெரிதாக வருத்துவது மூட்டுவலிதான்.''ஆண்களைக் காட்டிலும், 'ஆண்களைக் காட்டிலும், பெண்களே அதிக பாதிப்புக்கு ஆளாகிறார்கள்! என வேதனையோடு சொல்லும் கோயம்புத்தூர், கங்கா மருத்துவமனையின் ஆர்த்தோபீடிக் மற்றும் ஸ்பைன் சர்ஜரி துறைத் தலைவரும் பேராசிரியருமான ராஜசேகரன், கொஞ்சம் விரிவாகவே பேசினார்.
''ஆர்த்தோவின் முக்கியமான நோய்... 'ஆர்த்ரைட்டீஸ்’ எனப்படும் மூட்டுவலிதான். நம் தொடையையும், காலையும் இணைக்கும் பகுதியான மூட்டுப் பகுதியில்தான் 'கார்டலெஜ்’ (carilage) எனும் ஜவ்வு உள்ளது. அன்றாட வாழ்க்கைச் சூழல், செயல்பாடுகள், மாற்றங்களால் அந்த ஜவ்வு தேய ஆரம்பிக்கும். அப்போது மூட்டு வலி, மூட்டு வீக்கம், இடுப்பு வலி ஏற்படும். இதுதான் ஆரம்ப அறிகுறி. இந்த வலி அதிகரிக்கும்போது, அன்றாட வேலைகளைக்கூட நம்மால் செய்ய முடியாது. கால் வளைந்து போகும். இந்த அறிகுறிகள் தென்பட்டால், தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்!'' என்றவர், மூட்டுவலி வருவதற்கான காரணங்களை அடுக்கினார்.
''உடல் பருமனாக இருப்பவர்களுக்கு மூட்டு வலி வர வாய்ப்பு அதிகம். ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்து டி.வி. பார்ப்பது, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளாமல், ஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட் எனச் சாப்பிடுவது, தேவையான நடைபயிற்சி இல்லாதது போன்றவையும் இதற்கு காரணமாகிவிடுகின்றன. கூடவே, எலும்புகளும் தசையும் வலுவிழக்கவும் செய்கின்றன.
மரபணு ரீதியாக இளவயதினருக்குக்கூட மூட்டுப் பிரச்னைகள் வரக்கூடும். இதை 'மூட்டு வாதம்’ (ருமடாய்டு ஆர்த்ரைட்டீஸ்) என்பார்கள். இது பரம்பரை நோய். இதன் காரணமாக மூட்டுவலி, வீக்கம் ஏற்பட்டு நடப்பதே சிரமமாகிவிடும்!'' என்றவர் மூட்டுவலியைத் தடுக்கும் முறைகள் குறித்து தொடர்ந்தார்.
''சிறு வயதிலிருந்தே தினமும் 2 முதல் 3 கிலோ மீட்டர் தூரம் வேகமாக நடைபயிற்சி செய்ய வேண்டும். அதற்காக ரன்னிங், ஜாக்கிங் என்று அதிகமான உடற்பயிற்சி தேவை இல்லை. சாதாரண நடை பயிற்சியே போதுமானது. மூட்டுவலியின் அறிகுறிகள் தெரிந்தால்... சம்மணம் போடுவதையும் குத்தங்கால் போட்டு அமர்வதையும் தவிர்க்க வேண்டும். மாடிப்படி ஏறக்கூடாது. வெஸ்டர்ன் டாய்லெட்டைப் பயன்படுத்துவது நல்லது.
தினமும் சத்தான உணவுகளைச் சேர்ப்பது நல்லது. குறிப்பாக கால்சியம் அதிகமான உணவு, கீரை, மீன் உணவுகளை உட்கொள்வது அவசியம். காலை, மாலை இருவேளையும் பால் குடிப்பது நல்லது.
முக்கியமாக வயதுக்கேற்ற உடல் எடை இருக்க வேண்டும். அதிக எடை ஆபத்தைத்தான் ஏற்படுத்தும். மூட்டுவலி வருவதுபோல் தோன்றினால், முதலில் உங்களது எடையில் 10 சதவிகிதம் குறைத்துவிட்டாலே போதும். சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த நோயாளிகள், எடையைக் கட்டுப்பாடாக வைத்திருப்பது மிகவும் அவசியம்.
மூட்டுக்கு சூடு உத்தடம் கொடுக்கலாம். இது நல்ல கை வைத்தியம்.
மருத்துவரின் ஆலோசனைப்படி 'மூட்டு பெல்ட்’ Knee Belt  முட்டியில் பொருத்திக்கொண்டால்... மூட்டுகள் அசையாமல் இருப்பதுடன் வலியும் குறையும்.
தரமான ஆயில் மசாஜ் செய்வது, தினமும் யோகா மற்றும் பிசியோதெரபி முறைகளைக் கடைபிடித்தால் தசைகள் உறுதியாக இருக்கும்.
மூட்டுவலிக்கு மாத்திரைகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. வலி நிவாரணி மாத்திரைகளை சாப்பிடுவதால் வயிற்றில் புண், அல்சர், கிட்னி பாதிப்புகள் வரலாம்!'' எனச் சொல்லும் டாக்டர் ராஜசேகரன், அடுத்து சொன்னதுதான் முக்கிய மாகக் கவனிக்க «வண்டியது. ''குடும்பம் மற்றும் அலுவலகப் பணிகளால் மூட்டுவலிக்கு ஆளாகும் பெண்கள், 'வலி என் விதி’ என்று அசமந்தமாக இருந்துவிடுகிறார்கள். ஆரம்பத்திலேயே மூட்டுவலியைச் சரிசெய்யாமல் விட்டால், இறுதியில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைதான் ஒரே தீர்வு என்றாகிவிடும். இந்த சிகிச்சை செய்வதற்கு சுமார் 1.25 லட்சம் ரூபாய் செலவாகும். 'கடைசி காலத்தில் எதுக்கு இந்த ஆபரேஷன்... நான் என்ன ரன்னிங் ரேஸுக்கா போகப் போறேன்?’ என்கிற சலிப்பில் குடும்பப் பெண்கள் அதனையும் தவிர்த்துவிடுவதுதான் பெரிய சோகம். விளைவு, கழிப்பறைக்குப் போகவேண்டும் என்றால்கூட அடுத்தவரின் உதவி தேவை என்று நிலைமை மோசமாகிவிடும். மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மூலம் 25 முதல் 30 வருட காலங்கள் எந்தப் பிரச்னையும் இல்லாமல் இருக்கலாம்.
இப்போது எல்லாம் 40 வயதினருக்குக்கூட மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. திருமணம் ஆகாத ஒரு பெண்ணுக்கு இந்த அறுவை சிகிச்சை செய்ய நேரிட்டாலும், குத்தங்கால், சம்மணமிட்டபடி உட்காருவதற்கு என்றே சிறப்பு உபகரணங்கள் பொருத்தி அறுவை சிகிச்சை செய்யப்படும். இதனால், வளைந்திருந்த கால்கள் நேராகும். கால்கள் அதிக எடை தெரியாமல் லைட்டாக இருக்கும். வலி என்பதே இருக்காது!'' எனச் சொல்லும் ராஜசேகரன்... முத்தாய்ப்பு அறிவுரையாக இப்படி முடிக்கிறார் -
''நமக்கு 'மூடு’ எந்த அளவுக்கு முக்கியமோ... அந்த அளவுக்கு மூட்டு முக்கியம். 'மூடு’ சரி இல்லை என்றால்கூட அடுத்த சில நிமிடங்களில் சகஜமான மனநிலை உருவாகிவிடும். ஆனால், மூட்டு சரி இல்லை என்றால்... அடுத்தடுத்து துரத்தும் பிரச்னைகள் அதிகமாகிவிடும். அதனால், ஆரம்ப வலி வருகிறபோதே அக்கறையாக செயல்பட வேண்டும்!''

நன்றி

விகடன்




Sunday, June 12, 2011

செல்போனே, தள்ளிப் போ!



செல்போன் டவர்களில் இருந்து பரவும் மின்காந்த அலைகளால், சிட்டுக் குருவி போன்ற பறவை இனங்கள் அழிந்து வருவதாக இயற்கை ஆர்வலர்கள் பதறுகிறார்கள். 'சிட்டுக் குருவிகளுக்கு மட்டுமல்ல... இதனால் பொதுமக்களுக்கும் அபாயகரமான நோய்கள் உண்டாகலாம்!’ என்ற இன்னோர் அணுகுண்டை வீசுகிறார்கள், உலக சுகாதார மருத்துவ விஞ்ஞானிகள்! 
ஐ.நா. உலக சுகாதார அமைப்பின் சர்வதேசப் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் மே 26 தொடங்கி ஜூன் 2-ம் தேதி வரை எட்டு நாள் மாநாடு ஒன்றை பிரான்ஸில் நடத்தியது. 14 நாடுகளைச் சேர்ந்த 31 விஞ்ஞானிகள் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் புற்று நோய் தடுப்பு குறித்தும் அதற்கான நவீன சிகிச்சைகள் குறித்தும் விவாதங்களும் ஆய்வுக் கட்டுரைகளும் எடுத்து வைக்கப்பட்டன. இந்த மாநாட்டில்தான், 'செல்போன் பயன்படுத்துவதால் மூளைப் புற்று நோய் வரலாம்’ என்ற அபாய அறிவிப்பை வெளியிட்டு அதிரவைத்து இருக்கிறார்கள்.
தினமும் அரை மணி நேரம் செல்போனில் பேசுகிறவர்களிடம் கடந்த 10 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடைப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாகச் சொன்ன விஞ்ஞானிகள், ''புற்று நோய் வரலாம் என்பது எச்சரிக்கைதானே தவிர இன்னும் முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால், சமீபகாலமாக மூளைப் புற்று அதிகரித்து வருவதற்கு செல்போன் உபயோகிப்பதற்கும் தொடர்பு இருக்கலாம்...'' என்று சொல்கிறார்கள்.
இதுகுறித்து மதுரை அப்போலோ மருத்துவமனையின் புற்று நோய் மற்றும் கதிரியக்க சிகிச்சை நிபுணர் டாக்டர் அமர்நாத்திடம் பேசினோம். ''வாகனப் புகை, சிகரெட் புகை, தொழிற்சாலை நச்சு போன்றவை போலவே, செல்போன்களில் இருந்து பரவும் மின் காந்த அலைகளும் நமது உடலில் நிச்சயம் பாதிப்பை உண்டாக்கும். அது மூளைப் புற்றாக இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை மணி அடித்துள்ளது. இன்னும் ஆய்வுகள் முழுமையடையவில்லை. அநேகமாக ஜூலை மாதத்தில் முதல் கட்ட ஆய்வு முடிவுகள் அதிகாரபூர்வமாக வெளியாகலாம்.
கதிரியக்கத்தின் அளவுக்கு இல்லை என்றாலும்கூட, மின் காந்த அலைகள் நமது உடலின் மரபணுக்களுக்கு பாதிப்புகளை உண்டாக்குகிறது. குறிப்பாக மின்காந்த அலைகளானது, நமது மூளையில் உள்ள மரபு அணுக்களைத் தாக்குகிறது. இந்தத் தாக்குதல் தொடர்ந்து கொண்டே இருந்தால்... மூளைப் புற்று கட்டாயம் வந்துவிடும். செல்போனை அதிகநேரம் காதில் வைத்துப் பேசுவதால் காது நரம்புகளிலும் ஒரு வகையான கட்டி உருவாகலாம். இது சாதாரணக் கட்டியாகவும் இருக்கலாம்... கேன்சராக மாறவும் வாய்ப்பு உண்டு.
செல்போன்களை அதிகம் பயன்படுத்தும் ஆண்களின் விந்தில் உள்ள உயிரணுக்கள் அழிக்கப்படுகிறது. அதனால் தாம்பத்ய உறவு பாதிக்காது என்றாலும் குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்படும். அப்படியே பிறந்தாலும் ஊனமாக இருக்க வாய்ப்பு அதிகம். பெண்களுக்கு கருச்சிதைவு வாய்ப்பும் உண்டு!'' என்று அதிர வைத்தார்.
அவரே தொடர்ந்து, ''அமெரிக்கா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில், ஒரு பொருளால் பாதிப்பு ஏற்படுவது உறுதியாகத் தெரிந்தால், உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளையும் விழிப்பு உணர்வு பிரசாரங்களையும் முடுக்கிவிடப்படுகிறது. இந்த விஷயத்தில் தெளிவான உறுதியான ஆராய்ச்சி முடிவு களுக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள். நம் நாட்டிலும், டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு இன்ஸ்டிட்யூட்டில் இதற்கான ஆராய்ச்சிகள் நடக்கின்றன. செல்போன் பாதிப்புகள் குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரித்தாலும் நம்முடைய இண்டியன் கவுன்சில் ஆஃப் மெடிக்கல் ரிசர்ச் அமைப்பு, 'உலக சுகாதார அமைப்பின் அறிக்கை குறித்து இந்தியாவில் யாரும் அச்சப்படத் தேவை இல்லை. உடற்கூறுகளில் இந்தியர்களுக்கும் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க மக்களுக்கும் நிறையவே வேறுபாடுகள் இருப்பதால் அங்கு நடத்தப்பட்ட ஆய்வுகளை வைத்து நாம் ஒரு முடிவுக்கு வரமுடியாது. நம் நாட்டின் ஆராய்ச்சி முடிவுகள் வந்தால்தான் உறுதியாகச் சொல்ல முடியும்’ என்கிறார்கள். இது இந்திய செல்போன் வியாபாரத்தை பாதித்துவிடக் கூடாது என்பதற்காகச் சொல்லப்படும் கருத்தாகவே தெரிகிறது.உலகம் முழுவதும் 5 பில்லியன் மனிதர்களின் கைகளில் செல்லப் பிள்ளையாய் இருக்கிறது செல்போன். அதிலும், இந்தியர்கள்தான் அதிக நேரம் செல்போனைப் பயன்படுத்துகிறார்கள். புற்று நோய் குறித்த தகவல்கள் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், நம்மை நாமே காத்துக் கொள்ளும் நடவடிக்கைகளில் இப்போதே இறங்குவது நல்லது. செல்போன்களை எப்போதும் உடம்புடன் ஒட்டியே வைத்திருக்க வேண்டியது இல்லை. அதிகநேரம் பேசுவதைத் தவிர்க்கலாம்... அவசியம் ஏற்பட்டால் ஹெட் போன்களை பயன்படுத்தலாம். தூங்கும் நேரத்தில், தலையணைக்கு அருகில் செல்போன் வைப்பதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்!'' என்று ஆலோசனையும் தருகிறார்.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதால்... செல்போனை தேவைக்கு 'மட்டும்’ பயன்படுத்தித் தள்ளி வைப்போமே!

நன்றி

ஜூனியர் விகடன் 

Friday, June 10, 2011

காயிதே மில்லத்




பூமி அதிராத நடை.. புன்முறு வல் பூந்தோட்டம் போட்ட முகம்... கருணை நிலா ஒளி வீசும் விழிகள்... மென்மையான குரல்... எந்த நிலை யிலும் கண்ணியம் தவறாத சீர்மை - இதுதான் காயிதே மில்லத் இஸ்மா யில் சாயபு.
எங்கள் தமிழாசிரியர் அன்றைக்கு ஒரு நாள் - வகுப்பில் தமிழ்ப் பாடம் நடத்துவதற்குப் பதிலாக 'அரசியல்' பேசினார்.


''எத்தனையோ தலைவர்கள் தமி ழுக்காக உயிர்விடுகிறேன் என்கிறார் கள். ஆனால், இந்தியாவின் ஆட்சி மொழியாக எந்த மொழி இருக்கலாம் என்ற விவாதம் டெல்லியிலே வந்தி ருக்கிறது. வடக்கே உள்ளவர்கள் இந்திதான் ஆட்சிமொழி என்கிறார் கள். தெற்கே உள்ளவர்கள் ஆங்கிலம் தான் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்கிறார்கள். ஆனால் ஒரு 'சாயபு'தான் 'எங்கள் தமிழ்மொழி எல்லா வளமும் பெற்ற மொழி. அதுவே இந்தியாவின் ஆட்சி மொழி யாக இருக்கத் தகுதி உள்ளது' என்று பேசியிருக்கிறார். அவர் இஸ்மாயில் சாயபு. நல்ல தமிழ் பேசும் நெல்லை யைச் சார்ந்த பச்சைத் தமிழர்!''
கேரளத்திலுள்ள மஞ்சேரி (இப் போதைய மலப்புரம்) நாடாளுமன்றத் தொகுதிக்குள் நுழையாமலேயே காயிதே மில்லத் வெற்றி பெற்றிருந்த நேரம். அவரைச் சந்திக்க நினைத் தேன். எக்கச்சக்கமான கூட்டம், மலர் மாலை, கைத்தறித் துண்டு, பட்டாசு வெடிகள் இவையெல்லாம் இருக்கும் என நினைத்து அவரது இல்லத்தை அடைந்தபோது, அதிகாலை நேரத்து ஏரிக்கரைபோல அமைதியாக இருந்தது அவரது வீடு.
என்னைப் பார்த்ததும் அவர் கேட்ட முதல் கேள்வி: ''பசியாறிட்டீங் களா?''
'பசியாறுதல்' எனும் தமிழ்ச் சொல் லின் அழகு பற்றி வியந்து போனேன். ''உணவு உண்பதற்கு இப்படி ஒரு சொல்லா உங்கள் பகுதியில்?'' என்று கேட்டேன்.
''உணவு உண்டீர்களா என்பதற்காக அல்ல இந்தச் சொல்! 'பிரேக் ஃபாஸ்ட்' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நிகரானது இந்தச் சொல். காலை உணவு உண்டீர் களா என்று கேட்பதற்குத்தான் இந்தச் சொல் பயன்படுத்தப்படும்'' என்று பதி லுரைத்தார்.
எழில் எழிலான தமிழ்ச் சொற்கள் எத்தனை நெல்லைப் பகுதியில் வழங் குகின்றன என்று அவர் அடுக்கிக் கொண்டே போனார். 'புட்டிங்' என்ற சிற்றுண்டி குறித்த சொல்லுக்கு 'வட்டில் அப்பம்' என்ற சொல் இருப்பதாக அவர் கூறியபோது, இமை இரண்டும் சேராவண்ணம் நெடுநேரம் அவரைப் பார்த்தபடி இருந்தேன்.
நபிகள் நாயகம் விழா! காயிதே மில்லத் பேச இருக்கிறார். அதற்கு முன், திராவிட இயக்கத்தைச் சார்ந்த ஒருவர் பிள்ளையார் பற்றிய கதையைக் கூறிக் கேலி செய்தார். காயிதே மில்லத் தமது பக்கத்தில் இருந்தவரிடம் ஏதோ சொல்ல, பேச்சாளரின் பேச்சு அதோடு முடிக்கப்படுகிறது!
காயிதே மில்லத் பேசும்போது சொன்னார்... ''இது புனிதமான மீலாது விழா மேடை. இதில் நபிகள் நாயகத்தின் சிறப்பு, இஸ்லாத்தின் மேன்மை பற்றிப் பேச மட்டுமே அனுமதிக்கப்படும். பிற மதத்துக் கடவுள்களைப் பற்றிக் கேலி செய்து பேசக்கூடாது. இஸ்லாமிய மார்க்கம், 'பிற மதத்துக் கடவுள்களைப் பற்றி கேவலம் செய்து பேசாதீர்கள்' என்று கூறியிருக்கிறது.''
இத்தகைய பண்பு நலன்கள் கொழித்துச் செழித்து இருந்த காரணத்தால்தான் அவர் 'கண்ணியமிகு காயிதே மில்லத்' என அழைக்கப்படுகிறார்.



Tuesday, June 7, 2011

அறிமுகம்


பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பிற்கினிய வாசகர்களுக்கு,
நமதூருக்கு பல்வேறு வலைப்பூக்கள் இருக்கின்றன மிகச்சிறப்பான ஆக்கபூர்வமான நிறைய பதிவுகள் பதியப்படுகின்றன, இருப்பினும் கூட்டாஞ்சோறு எனும் இவ்வலைப்பூ ஏன் என நீங்கள் கேட்கலாம்
அதிரை நிருபர் அதிரை எக்ஸ்பிரஸ் போன்ற வலைபூக்கள் அவர்களுக்கென தனி வியூகம் அமைத்து சிறப்பாக பணியாற்றி வருகின்றனர் இன்னும் சில வலைப்பூக்கள் அவரவர்களின் இயக்கங்களுக்காக துவங்கப்பட்டு அதன் செயல்பாடுகள் அதில் பதியப்பட்டு வருகின்றன இன்னும் வேறு சில செய்திகளுக்கும் முக்கியத்துவம் தரப்படுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை,
ஆனால்  இவ்வலைபூவின் முக்கிய நோக்கம், எந்த இயக்க்கத்தையும் சார்ந்து இல்லாமல்  நம்தூரின் சில அவலங்களை மேலும் அரசியல் அவலங்களை வெளி கொண்டுவர இவ்வலைப்பூ முக்கிய பங்கு வகிக்கும் என்பதை உறுதிப்பட கூறுகிறோம் அதே நேரத்தில் நல்ல விசயங்களை ஊக்கப்படுத்துவதிலும் தட்டி கேட்க வேண்டிய விசயங்களை தட்டி கேட்பதிலும் இவ்வலைப்பூ முக்கிய பங்கு வகிக்கும் அதுமட்டுமல்லாமல் கலகலப்பான தமாஷான விசயங்களும் இதில் இடம் பிடிக்கும்.

சில வருடங்களுக்கு முன்னால் நமதூரின் ஒரு வலைப்பூவில் பகிரங்கமாக எடுத்து கூறப்பட்ட சில விஷயத்துக்கு அதை நடத்துபவர்கள் கடுமையான மிரட்டலுக்கு உள்ளானார்கள்.
எந்த ஒரு வலைப்பூ நடத்துபவர்களும் தொழில் முறையில் நடத்துபவர்கள் அல்ல, அவர்களின் வேலை பழுவுக்கிடையே நம் அறிந்ததை மற்றவருக்கும் தெரியப்படுத்தவேண்டும் என்ற நோக்கில் நடத்துகின்றனர் அது போலதான் இந்த கூட்டாஞ்சோறு வலைப்பூவும், அது என்ன கூடஞ்சோறு என நீங்கள் வினவலாம் அது ஒன்றும்  இல்லை, ஒரு சில நண்பர்களின் உந்துதலில் அவர்களின் ஒத்துழைப்பில் இந்த வலைப்பூ துவங்கப்பட்டுள்ளது,
இதில் எல்லா விசயங்களும் பதியப்படும் யார் வேண்டுமானாலும் இதற்கு உங்கள் செய்திகளை அனுப்பலாம் பாரபட்சமின்றி பதியுவோம் என உறுதி பட கூறுகிறோம் குறிப்பாக மற்ற வலைப்பூக்களில் எழுத தயங்கும் விசயங்களை எங்களுக்கு அனுப்பலாம் உடனே அது பதியப்படும், மேலும் அதற்காக அந்த செய்தியை அனுப்பும் நபர் யார் என்ற ஆற்முகம் நீங்கள் விரும்பினாலொழிய எங்களுக்கு அது அவசியமில்லை, உண்மையை சொல்ல யார் என்ற அறிமுகம் தேவையில்லை, சொல்லப்படும் செய்தியால் நன்மை ஏற்படின் அது போதும்

மேலும் கலகலப்பான செய்திகளும் நீங்கள் அனுப்பி வைக்கலாம்

உங்கள் படைப்புகள் அல்லது செய்திகள் அனுப்பவேண்டிய மின் அஞ்சல் adiraivasi@gmail.com .

வஸ்ஸலாம்.

 கூட்டாஞ்சோறு குழு. 





Wednesday, June 1, 2011

அதிரை பைத்துல்மால் குர்ஆன் மாநாடு ஏன்...?


அதிரையின் தொண்டு நிறுவனங்களில் குறிப்பிடத்தக்க சேவைகளை செய்து வருவதில் அதிரை பைத்துல்மாலின் சேவை அதி முக்கியமானது
எத்தனையோ சேவை நிறுவனங்கள் துவங்கப்பட்டும் சில தொய்வான  சேவைகளாலும், சில் இருந்த இடம் தெரியாமல் இருப்பதும், நாம் எல்லோரும் அறிந்ததே
இருப்பினும் துவங்கப்பட்டது முதல் எத்தனையோ இடையூறுகள் வந்தபோதும் அதையெல்லாம் உடைத்தெறிந்து விட்டு வீற்றிருப்பதில்,  அதிரை பைத்துல்மால் தனித்திருக்கிறது.

இவ்வமைப்பின் செயல்பாடுகளில் மிக முக்கியமானது திருக்குர்ஆன்  மாநாடு, . பெரும்பாலனவர்களின் பெருத்த ஆதரவுடன் ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து இம்மாநாட்டினை இவ்வமைப்பு வெற்றிகரமாகவே நடத்திக்கொண்டிருக்கிறது இடையில் சில இடைவெளிகள் விட்டு மீண்டும் இதை சிறப்பாக நடத்திக்கொண்டிருக்கின்றனர் இவ்வமைப்பினர், ஆனால் இதற்க்கு பெரும் ஆதரவு தெரிவித்து வந்த சிலர் தற்பொழுது இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் முன்பேதும் இல்லாத அளவுக்கு இம்மாநாட்டிற்கு ஆதரவு பெருகி வரும் அதே வேலையில் ஒருபுறம் எதிர்ப்பும் பெருகி வருவதற்கான காரணம் என்ன?,
இதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சிலரை விசாரித்ததில், சேவைகளை பலவாறு செய்வதில் அதிரைபைதுல்மாலை மிஞ்சுவதில் வேறு எந்த அமைப்பும் நெருங்க முடியாது என்று ஒத்துகொள்ளும் அவர்கள் இம்மாநாட்டினை ஒரு வீண் செலவாகவே கணிக்கின்றனர் இதற்காகும் செலவை வேறு ஏதேனும் உதவிக்கு உபயோகப்படுத்திக்கொள்ளலாம் என்பது அவர்களின் வாதம்.
                                                                                                                                         
பல்வேறு சேவைகளை செய்துவரும் இவ்வமைப்பு ஒவ்வொரு சேவைகளுக்கும் தனி தனி பொறுப்புதாரிகளை நியமித்து திட்டமிடப்பட்ட சேவைகளை அந்தந்த பொறுப்புதாரிகளின் மேலாண்மையில் சிறப்பாகவே செய்து வருகின்றனர். திருக்குர்ஆன் மாநாடு என்பது இதன் சிறப்பான செயல்பாடுகளில் முக்கியமானது, காரணம், இம்மாநாட்டில் தமிழகத்தின் தலை சிறந்த பேச்சாளர்களை அழைத்து நல்ல கருத்துக்களை மக்களுக்கு எத்திவைப்பதும் ஒரு சேவையே, மேலும் பேச்சாளர்களின் சிறப்புரை மட்டுமல்லாது மாணவ மாணவிகளுக்கான மார்க்க சம்மந்தமான அறிவுப்போட்டிகள், இன்னும் குர்ஆன்  சம்மந்தமான போட்டிகள் வைத்து, அவர்களை ஊக்குவிப்பதும் அதி முக்கியமானது,  இதெல்லாம் தேவயில்லை என்பது  இம்மாநாட்டினை எதிர்பவர்களின் வாதமா?
முன்பு நடத்தப்பட்ட மாநாட்டிற்கு தனி வசூல் வைத்து, அதைக்கொண்டே நடத்தினர், அதற்க்கு கடும் எதிர்ப்பு வரவே, இதற்க்கு ஆதரவாக இருக்கும் ஒரு சில செல்வந்தர்களிடம் மொத்த செலவையும் ஏற்றுகொள்ள செய்து தற்போது இம்மாநாட்டினை நடத்திக்கொண்டிருக்கின்றனர். திருக்குர்ஆன் மாநாட்டுக்கு என்று ஒதுக்கும் பணத்தை வேறு சேவைக்கு சிபாரிசு செய்வதில் அர்த்தமில்லை. ஒவ்வொன்றிற்கும் தனிதனி ஒதுக்கீடு செய்தே சேவைகள் செய்யப்படுகின்றன.
இவ்வமைப்பை ஒருகாலத்தில் கடுமையாக எதிர்த்தவர்கள், தற்பொழுது ஆதரவு கரம் நீட்டிக்கொண்டிருக்கும் இவேலையில் இதை மேலும் மெருகேற்ற செய்வதில்தான் ஒவ்வொருவரும் முயற்சி செய்ய வேண்டும்.

உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை உபத்திரம் செய்யாமல் இருந்தால் போதும்இதை அதிரை பைத்துல்மாலின் செயல்பாடுகளை கண்டு பொறாமை கொள்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


அதிரையின் நன்மை விரும்பி.