தங்களின் வருகைக்கு நன்றி

தங்களின் வருகைக்கு நன்றி
output:

Wednesday, May 25, 2011

பதிவு செய்... திட்டமிடு...தாக்கு!



ஜேம்ஸ்பாண்ட் படங்களில் கதாநாயகனை லேசர் கதிர்கொண்டு, எதிரிகள் தாக்குவதைப் பார்த்திருப்போம். நாயகன் வளைந்து, நெளிந்து எங்கு, எப்படிச் செல்கிறாரோ... அப்படியே அந்தக் கருவியும் சென்று தாக்கும். அதே தொழில்நுட்பத்தில் அறிமுகமாகி உள்ளது, சைபர்நைஃப் எனும் அதிநவீன அறுவை சிகிச்சைக் கருவி. நோயாளி மூச்சுவிடும் அசைவைக்கூட கணக்கிட்டு, புற்று நோய்க் கட்டியை தாக்கி அழிக்கும் இந்தக் கருவி.


ஒரு காலத்தில் புற்று நோய்க்கான அறுவை சிகிச்சை சிக்கலானதாகவும், பக்கவிளைவுகள் நிரம்பியதாகவும், அதிக செலவுவைப்பதாகவும் இருந்தது. ஆனால், இன்றைய நவீனத் தொழில்நுட்பத்தின் காரணமாக, சில மணி நேரங்களில் அறுவை சிகிச்சை முடிந்து நோயாளிகள் வீடு திரும்ப முடிகிறது.

அப்போலோ ஸ்பெஷாலிட்டி கேன்சர் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் டி.ராஜா இதுபற்றிச் சொல்கிறார். ''சில புற்றுநோய்களை மருந்து கொடுத்தே குணப்படுத்த முடியும். அறுவை சிகிச்சையில் சில வகை குணமாகும். ஒரு சில வகைப் புற்று நோய்க்கு ரேடியேஷன் சிகிச்சைதான் சிறந்தது. எந்த உறுப்பை புற்று நோய் தாக்கி உள்ளது, எந்த வகையான புற்று நோய், எவ்வளவு தூரம் தாக்கி உள்ளது என்பதைப் பொறுத்தே, சிகிச்சை முறையை முடிவு செய்வோம். மார்பகப் புற்று நோய், வாய்ப் புற்று நோய் என்றால், அறுவை சிகிச்சையே சிறந்த தீர்வு. ஆனால், ரத்தப் புற்று நோய்க்கு அறுவை சிகிச்சை செய்யாமல், கீமோதெரபி செய்ய வேண்டும். வியாதி அதிகமாகப் பரவி இருந்தால், குறிப்பிட்ட உறுப்பில் புற்று நோய் காரணமாக வலி அதிகமாக இருந்தால், கதிரியக்கம் கொடுப்பது மட்டுமே உடனடி ஆறுதல்.
ஆனால், கதிரியக்கம் கொடுக்கும்போது, சுற்றிலும் உள்ள நல்ல திசுக்களும் கதிரியக்கம் செல்லும் பாதையில் நிற்பதால் பாதிக்கப்பட்டது. அதனால் குறிப்பிட்ட உறுப்பில் உள்ள புற்றுக் கட்டிக்கு 50-60 கிரே கதிரியக்கம் கொடுக்க வேண்டும் என்றால், மொத்தமாக ஒரே பக்கத்தில் இருந்து கொடுக்காமல்... நான்கு பக்கங்களில் இருந்து, அந்த 50 கிரேவைப் பிரித்துக் கொடுத்தார்கள். இப்படி செய்வதால், சுற்றிலும் உள்ள நல்ல திசுக்களில் ரேடியேஷன் அளவு அதிக பாதிப்பை உண்டாக்காது.

புதிய தொழில்நுட்பத்தின்படி, ஸ்கேன் மற்றும் கம்ப்யூட்டரை இணைத்து, புற்றுக்கட்டியின் முப்பரிமாணத்தைத் துல்லியமாக காண முடிகிறது. நான்கு பக்கம் இருந்து கதிரியக்கம் கொடுத்ததைவிட, தற்போது மொத்த டோஸையும் பல பங்குகளாகப் பிரித்து பல கோணங்களில் இருந்தும் புற்றுக் கட்டி அழிக்கப்படுகிறது. இந்த புதிய சிகிச்சை முறையை ஸ்டீரியோடாக்டிஸ் என்பார்கள். சமீப காலங்களில் மிக வேகமாக வளர்ச்சி அடையும் இந்தத் துறையில் அடுத்த கட்டமாக ஐ.எம்.ஆர்.டி. மற்றும் ஐ.ஜி.ஆர்.டி. தொழில்நுட்பங்கள் வந்துள்ளன. மேலும் ரேடியோ சர்ஜரி என்ற தொழில்நுட்பமும் புழக்கத்தில் வந்துவிட்டது.
பொதுவாக கத்திவைத்து, அறுத்து செய்வதைத்தான் அறுவை சிகிச்சை என்போம். கத்தி இல்லாமல் உயர் ஆற்றல் பீம் ரேடியேஷனைக்கொண்டு புற்று நோய்க் கட்டியைப் பொசுக்கும் நுட்பத்தை இந்த அறுவை சிகிச்சையில் கொண்டுவந்தனர்.

இந்த அனைத்து சிகிச்சைக்கும் உச்சகட்ட வளர்ச்சியாக வந்து இருப்பது, சைபர்நைஃப். இது அதிக எண்ணிக்கையிலான ரேடியேஷன் பீம்களை பல்வேறு கோணங்களில் இருந்தும் புற்றுக் கட்டி மீது செலுத்தக்கூடியது. இதனுடன் பொருத்தப்பட்டுள்ள எக்ஸ்ரே கேமரா, நோயாளிகளைத் துல்லியமாகக் கண்காணிக்கும். சுவாசித்தல், அசைதல்போன்ற சின்னஞ்சிறு அசைவுகளையும் பதிவு செய்து, ரோபோ கருவிக்கு அனுப்பிவைக்கும். உடனே ரோபோ தன்னை அதற்கு ஏற்றதுபோன்று சரிப்படுத்திக்கொண்டு, மிகத் துல்லியமாகப் பல்வேறு கோணங்களில் இருந்தும் புற்றுக் கட்டி மீது கதிரியக்கத்தைச் செலுத்தும். தாக்க வேண்டிய பகுதி மில்லி மீட்டரைவிடக் குறைவாக இருந்தாலும், இந்தக் கருவியால் துல்லியமாகச் சென்றடைய முடியும். இந்த சிகிச்சை மூலம் வலி இல்லாத, ரத்த இழப்பு இல்லாத, தழும்பு இல்லாத அறுவை சிகிச்சை புற்று நோயாளிகளுக்குக் கிடைக்கிறது.

இந்த சிகிச்சைக்கு, முதலில் நோயாளியை சி.டி. ஸ்கேன் செய்வோம். அதன் மூலம் புற்றுக்கட்டியின் அளவு, வடிவம், இடம்போன்றவை துல்லியமாகக் கண்டறியப்பட்டு, டிஜிட்டல் தகவல்கள் சைபர்நைஃப் கருவிக்கு அளிக்கப்படும். எப்படி சிகிச்சை அளிப்பது என்று திட்டமிடப்பட்டு, அதன்படி சைபர்நைஃப் கருவி நோயாளியைச் சுற்றி பல இடங்களில் இருந்து கதிரியக்கத்தைச் செலுத்தி புற்றுக் கட்டியைத் தாக்கி அழிக்கும். புற்றுக் கட்டியின் தன்மையைப் பொறுத்து, 30 முதல் 90 நிமிடங்கள் வரை சிகிச்சை நீடிக்கும். பல கட்டங்களாக சிகிச்சை அளிக்கப்படுவதாக இருந்தால், ஐந்து நாட்கள் சிகிச்சை அளிக்கப்படும். இந்த சிகிச்சையில் மிக மிகக் குறைந்த அளவே பக்க விளைவுகள் காணப்படுகின்றன. அதுவும் சிகிச்சை முடிந்த சில வாரங்களிலேயே சரியாகிவிடும். இந்த சைபர்நைஃப் கருவி, ப்ராஸ்டேட், நுரையீரல், முதுகுத் தண்டுவடம், மூளை, கல்லீரல், கிட்னி புற்று நோய்க்கு பயன்படுத்தப்படுகிறது'' என்றார்.

புற்றுநோயை பயமின்றி எதிர்கொள்ளும் நிலை சீக்கிரமே வரும் என நம்புவோம்!
- பா.பிரவீன்குமார், படம்: ச.இரா.ஸ்ரீதர்

 Thanks to
 
Vikatan


No comments:

Post a Comment